Saturday, 19 November 2011

ஆதிச்சநல்லூர் சிதம்பரம்


ஆதிச்ச நல்லூர் திருநெல்வேலியில் இருந்து 24 கிமீ தூரத்தில் உள்ள சிறிய கிராமம். தாமிரவருணி இந்த ஊர் வழியாக ஓடுகிறது. ஆனால் நிலம் வளமானதல்ல. இங்கே தாமிரவருணியின் கரையில் ஒரு மேடு இருந்திருக்கிறது. இந்தமேடு ஒரு இடுகாடு. கிமு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு  ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய பெருங்கலக் காலகட்ட மக்களின் இடுகாடு இது. தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே.
ஆதிச்சநல்லூர் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு ஆர்வமூட்டும் கதை.  பதினேழாம் நூற்றாண்டு இஸ்லாமியப் படையெடுப்புகளின்போது நகைகளையும் காசுகளையும் புதைத்து வைக்கும் வழக்கம் உருவானது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் புதையல் எடுப்பது ஒரு மனநோய் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தை பீடித்தது. இவ்வாறு கண்ட இடங்களில் தோண்டிக்கொண்டிருந்த காலத்தில்  மேய்ச்சல் மக்கள் இந்தக் குன்றில் இருந்து சில  தங்க நகைத்துண்டுகளை தோண்டி எடுத்தனர். பின்னர் இங்கே தேடுதல்வேட்டை  ஆவேசமாக நடந்தது.


புதையல்களை பறிமுதல் செய்வதில் ஜரூராக இருந்த பரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்துக்கு இது சென்றது. அவர்களிடமிருந்து புதைபொருள் ஆய்வாளர்கள் களத்துக்கு வந்தார்கள். 1876ல் பிரிட்டிஷ் ஆய்வாளரான  அலக்ஸாண்டர் ரெயா இங்கே விரிவான தொல்லியலாய்வுகளை நடத்தினார். தென்னிந்தியாவில் இத்தனை பிரம்மாண்டமான தொல்பொருட்குவியல் எங்குமே கிடைத்தது இல்லை. பல்லாயிரம் பொருட்கள் இங்கே கிடைத்தன. மண்பாண்டங்கள், மண்ணினால் ஆன வீட்டுப்பொருட்கள், மண்சிலைகள், வெள்ளி தங்க நகைத்துண்டுகள் இரும்புக்கருவிகள் என அவை பலவகைப்படும்


உண்மையில் இவற்றின் தொன்மையும் அருமையும் அப்போது முழுமையாக உணரப்படவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அன்றைய பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் இந்தியப்பெருநிலத்தில் பண்பாடு வெளியில் இருந்துதான் வந்திருக்கவேண்டும் என்ற கோட்பாட்டில் ஆழமாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆரிய இனக்கோட்பாடு ஆய்வாளர்களை முழுமையாகவே கவர்ந்திருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து ஈரான் வழியாக வந்த ஆரியர்களே இந்தியாவில் பண்பாட்டைக் கொண்டுவந்தவர்கள் என்ற நம்பிக்கை ஓங்கி இருந்தது. காரணம் ஐரோப்பியர் தங்களை ஆரிய இனமாக எண்ணி ஆரிய இனமே பண்பாட்டின் ஊற்று என நம்பினர்
ஆதிச்சநல்லூர் சான்றாதாரங்கள் இந்தக் கோட்பாட்டுக்கு நேர் எதிரானவை. அவை மிகத்தொன்மையான ஒரு பண்பாட்டை காட்டின என்பதோடல்லாமல் அந்தப்பண்பாடு மிக வளர்ச்சி கொண்டிருந்தது என்பதையும் காட்டின. அங்கே கிடைத்த மண்பாண்டங்களில் எழுத்துருக்கள் இருந்தன. பல்வேறு இறைவடிவங்கள் இருந்தன. உலோகப்பொருட்கள் மிகநுண்மையாகச் செய்யப்பட்டிருந்தன

 பல்வேறு காலகட்டங்களிலாக இங்கே தொடர்ந்து தொல்லியலாய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன. நாலாயிரம் வருடப்பழமை அவற்றுக்கு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஏறத்தாழ 114 ஏக்கர் சுற்றளவில் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாழிகள் ஒன்றுக்குக் கீழ் ஒன்றாக மூன்று மண்அடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறைந்தது ஆயிரம் வருடக்காலம் இந்த இடுகாடு பயன்படுத்தப்பட்டிருக்கப் பட்டதன் ஆதாரம்.
இங்குள்ள உலோகப்பொருட்களும் மண்பாண்டங்களின் உற்பத்தியில் உள்ள நேர்த்தியும் அவற்றில் உள்ள எழுத்துக்களும்தான் ஆய்வாளர்கள் மத்தியில் மிகச்சிக்கலான கேள்விகளை எழுப்பி இன்றுவரை தீராத விவாதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காலத்தால் ஆதிச்சநல்லூர் சிந்துசமவெளி நாகரீகத்துக்கும் முந்தையதாக இருக்கக் கூடும் என்கிறார்கள். இத்தகைய உயர்தரமான உலோகப்பொருட்கள்  இங்கே புழக்கத்தில் இருந்தன என்பதைப் பார்க்கையில் சிந்து சமவெளி நாகரீகத்தைவிட மேலான ஒரு பண்பாடு இங்கே இருந்திருக்கலாம் என்கிறார்கள்

 மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாக கண்டறிந்துள்ளார்கள். அன்றாடப்புழக்கத்துக்கான மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களைக் காணும்போது அக்காலத்தில் கல்வியறிவு மிகப்பரவலாக இருந்தது என்றும் அது ஒரு நாகரீக சமூகம் என்றும் ஊகிக்கிறார்கள்.



ஆதிச்சநல்லூர் குறித்த ஆய்வுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கப்பட்டாலும் அவை சீராக முன்னெடுக்கபப்டவில்லை என்பதும் ஆதிச்சநல்லூர் திட்டமிட்டே மறைக்கப்பட்டது என்பதும் உண்மை. வரலாறு எப்போதுமே சமகால வரலார்றுஎழுத்தின் தேவைக்கு ஏற்பத்தான் ஆய்வுசெய்யப்படுகிறது. டாக்டர் சத்யார்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூரில் மேலும் விரிவான ஆய்வுகளைத் தொடங்கி இன்றைய கவனம் அதன் மீது உருவாக வழிவகுத்தவர். 2004 முதல் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தமிழ் வரலாற்றின் காலக்கணிப்புகளையும் தமிழ்ப்பண்பாட்டின் ஆழத்தையும் பிரமிக்கத்தக்க முறையில் மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை.

No comments:

Post a Comment