Monday, 28 November 2011

அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை


சென்னை, நவ.25    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழி வலுவடைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னையில் இன்று காலை வரை 10 செ.மீட்டர் வரை மழை பெய்துள்ளது.வடமேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவெடுத்து கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை நகரில் நேற்று  இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை நேற்றும் இன்றும் கொட்டியது. இதன் காரணமாக சென்னை கடலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் நேற்றும் இன்றும் விடாத பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. இவ்வாறு தேங்கிய நீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் பலத்த மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டன.  இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.  மேலும் சாலைகளில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment