புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாகும் கி.பி.முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய இந்நகரம் இன்று மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இன்றைய புதுச்சேரிக்குத் தெற்கே வங்காள விரிகுடாவை ஒட்டி வராகநதி எனப்படும் செஞ்சியாற்றங் கரையில் அமைந்துள்ள மேட்டுப்பாங்கான பகுதியே அரிக்கமேடு.
அரிக்கமேடு பெயர்க்காரணம் குறித்துப் பல்வேறு யூகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கே.ஆர். சீனிவாசன் தம் வாழ்வியல் களஞ்சியக் கட்டுரையில் அரிக்கமேடு என்பது அருக்குமேடு (Mound of ruins)அல்லது அருகுமேடு (Mound on ariver bank)என்பதன் திரிபாகலாம் என்கிறார். (வாழ்வியல் கலைக் களஞ்சியம் தொகுதி-1, ப. 732) ஆற்றின் போக்கால் அரிக்கப்பட்ட கரை என்பது இன்றைய நிலை. இன்றைய நிலையை விளக்கும் பெயர்க் குறியீட்டை அன்றைக்கே அப்பகுதிக்கு இட்டு வழங்கியிருப்பார்கள் என்ற விளக்கம் பொருத்தமாயில்லை.
களப்பிரர் காலத்துச் சமணசமய ஆக்கிரமிப்பின் காரணமாகத் தமிழகத்தில் நுழைந்த அருக வழிபாடு பொதுகே பகுதியில் நிலைபெற்றதால் பண்டைய பொதுகே என்னும் பெயர் மறைந்து அருகன்மேடு என்னும் பெயரே பரவலாக வழங்கப்படலாயிற்று, அருகன்மேடு என்னும் பெயரே காலப்போக்கில் மருவி அரிக்கமேடு என்றாயிற்று என்பார் முனைவர் சு.தில்லைவனம் (புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.23).
அருக்கன்மேட்டில் கிடைத்த புதைபொருட் சின்னங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளே. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் சில பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
‘யாடு வளபூதியின் பானை’ என்ற பிராமி எழுத்துக்கள் இடப்பட்ட பானைஓடு ஒன்று அருக்கன்மேட்டில் கிடைத்துள்ளது. (அ. இராமசாமி, புதுச்சேரி வரலாறு, ப. 19)
இப் பானைகளில் காணப்படும் எழுத்துக்கள் கி.மு. 2 முதல் கி.பி. 2 வரையிலான தமிழகப் பாறைக் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி எழுத்துக்களே.
பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தவர் பகவான் புத்தர் என்ற நம்பிக்கையுண்டு. மாமன்னர் அசோகர் தொடங்கி பௌத்தர்களே இந்தியா முழுவதிலும் பிராமி எழுத்தைப் பரவலாக உபயோகத்திற்குக் கொண்டுவந்தார்கள் என்பதில் ஐயமில்லை. அருக்கன்மேட்டுப் பானை ஓடுகளில் பிராமி எழுத்துக்களின் உபயோகம் பௌத்தர்களாலேயே நடைமுறைப் படுத்தப்பட்டது என்று கருதவும் வாய்ப்புள்ளது.

No comments:
Post a Comment